கேள்வி:
நான் ஒரு முதல் தலைமுறைப் பட்டதாரி. நான் அரசு தந்த அனைத்து சமூக மேம்பாட்டுத் திட்டங்களாலும் பயன்பெற்றிருக்கிறேன். சத்துணவு திட்டம் தொடங்கி, இலவசப் பேருந்து, பொறியியல் கல்லூரி இட ஒதுக்கீடு, கல்லூரியில் படிப்பு உதவித் தொகை என்று இன்னும் எனக்குத் தெரியாத பல்வேறு திட்டங்களாலும் பயன்பெற்றிருக்கலாம்.
தற்போது, இன்றைய உலகில் நன்கு பணம் சம்பாதிக்கக் கூடிய அளவுக்கு எனக்கு வசதி வாய்ப்புகள் அமைந்துள்ளதாகவே கருதுகிறேன்.
என் கேள்வி என்னவென்றால்: நான் என் குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் பெற வேண்டுமா? அதன் மூலம் வருங்காலத்தில் கல்வி/வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா?
நான் உயர் நடுத்தர வகுப்பில் இருப்பதல், நான் பொதுப்பிரிவுப் போட்டியில் இருப்பதாகக் கருதி, 20 ஆண்டுகள் கழித்து என் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தாமல் விடலாமா?
அப்படிப் பயன்படுத்தினால், நான் என்னை விட ஏழையான ஒருவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாக உணர்கிறேன்.
என் மனசாட்சி எண்ணுவது சரியா? இல்லை, வழக்கமான ஒரு நடுத்தர வகுப்பு ஆளின் மனநிலையுடன் இட ஒதுக்கீட்டைத் தவிர்க்க விரும்புகிறேனா?
என்னால் சரியான சொற்களால் கேட்க முடியவில்லை என்றாலும் என் கேள்வி உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
பதில்:
நீங்கள் கட்டாயம் உங்கள் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் பெற வேண்டும். இட ஒதுக்கீட்டையும் பயன்படுத்த வேண்டும்.
ஏன் என்றால்,
இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல. அரசியல் சாசனம் உங்களுக்குத் தந்திருக்கிற உரிமை. அதனைப் பயன்படுத்த கூச்சமோ குற்ற உணர்வோ வேண்டாம்.
இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிக்கும் வேலைவாய்ப்புத் திட்டம் அல்ல. அது அதிகாரத்தைப் பகிர்வதற்கான சட்டம்.
அதனால் தான் அது சமூக “நீதி” என்று அழைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உங்கள் முன்னோர்கள் சாதியின் பெயரால் பெற்ற தண்டனைக்கு, உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் இந்த நாடு வழங்கும் நீதி தான் இட ஒதுக்கீடு.
ஒரு குற்றம் நடக்கிறது. நான் பணக்காரன், அதனால் எனக்கு நீதி வேண்டாம் என யாராவது சொல்வீர்களா? பணத்துக்கும் நீதிக்கும் தொடர்பு இல்லை.
இந்திய அரசியல் சட்டம் யார் ஒடுக்கப்பட்ட சாதிகள் என்பதை அவர்களின் சமூக நிலை, கல்வி நிலை, பொருளாதார நிலை ஆகிய மூன்றையும் வைத்தே முடிவு செய்கிறது. இதில் சமூக நிலைக்கு அதிக முக்கியத்துவமும், பொருளாதார நிலைக்குக் குறைவான முக்கியத்துவமும் தருகிறது. (தொடர்புடைய செய்திக்கு மறுமொழியைப் பாருங்கள்)
எனவே, ஒரு தலைமுறை படித்து வேலைக்குப் போன உடன் உங்கள் ஒட்டு மொத்த நிலையும் உயர்ந்து விட்டதாக நீங்களே எண்ணிக் கொள்ள வேண்டாம்.
இந்தியாவில் தங்களை நடுத்தர வர்க்கம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பலர் உண்மையிலேயே கீழ் நடுத்தர வர்க்கம் தான் (தொடர்புடைய செய்திக்கு மறுமொழியைப் பாருங்கள்)
உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது? சென்னை, கேரளா போல் ஊழி வெள்ளம் வந்தாலும் உங்கள் சொத்து அழியாமல், குறையாமல் இருக்குமா?
மூன்றாம் உலகப் போரோ உலகப் பொருளாதார மந்த நிலையோ நேர்ந்தால் உங்கள் சொத்து குறையாமல் இருக்குமா?
ஆனால், போர் வந்தாலும் வெள்ளம் வந்தாலும் உங்கள் சாதி மாறாது. சாதிப் பாகுபாடும் மாறாது. (தொடர்புடைய செய்திக்கு மறுமொழியைப் பாருங்கள்)
நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் ஆகி 80 ஆண்டுகள் வாழ்ந்தாலும், உங்களுக்கு அடுத்து 3 தலைமுறைகள் வந்தாலும் உங்கள் சாதி மாறாது. சாதிப்பாகுபாடும் மாறாது.
நீங்கள் முன்னேறி விட்டீர்கள் என்று நினைப்பீர்கள்.
ஆனால், புதிதாக நீட் போன்று ஒரு தேர்வு முறையைக் கொண்டு வந்து உங்கள் படிப்பே பயனற்றதாக மாற்றுவார்கள். அப்போது பொதுப் பிரிவில் இடம் கிடைக்காமல் போகக் கூடிய உங்கள் மகனுக்கும் மகளுக்கும் இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கலாம். அந்த வாய்ப்பை நீங்கள் ஏன் மறுக்க வேண்டும்? அது உங்கள் குழந்தையின் உரிமை அல்லவா?
இட ஒதுக்கீடு என்பது உங்கள் பாட்டன்கள் உங்கள் பேரன்களுக்கு அவர்கள் பெயரில் எழுதி விட்டுச் சென்ற சொத்து. அதனைப் பத்திரமாகக் காப்பாற்றி கைமாற்றி விடுவது தான் உங்கள் வேலை. மறுப்பதோ தானம் செய்வதோ உங்கள் வேலை இல்லை.
இட ஒதுக்கீடு பொதுவாக இரண்டு காரணங்களுக்காகத் தரப்படலாம்:
1. அங்கீகாரம் - இராணுவ வீரர்களுக்கு (அல்லது அவர்கள் வாரிசுகளுக்கு), விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது அல்லவா? இது அவர்களுக்கான அங்கீகாரம். கல்வியில், வேலைவாய்ப்பில், ஏன் நாடாளுமன்றத்தில் கூட இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது. பல் வேறு திறமைகள், கடமைகள் உள்ளவர்களையும் ஊக்குவிக்க வேண்டும், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இட ஒதுக்கீடு வழங்குகிறார்கள். இது பொதுவாக அளவில் குறைவாக இருக்கும்.
2. அதிகாரத்தில் பிரிதிநிதித்துவம் - சமூகத்தின் உள்ள பல்வேறு மக்களுக்கும் அவர்களின் இருப்புக்குத் தகுந்தவாறு அதிகாரத்தில் பிரிதிநிதித்துவம் வழங்குகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு.
தமிழக அரசு வேலைகளில் 30% பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு.
இரயில்களில், பேருந்துகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு.
மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு துறைகளில் இட ஒதுக்கீடு உண்டு.
இவர்கள் யாரும், “ஐயகோ, நான் ஒரு பணக்கார மாற்றுத் திறனாளி அல்லது பெண். எனக்கு இந்த இட ஒதுக்கீடு வேண்டாம்” என்று சொல்வதில்லை. ஏன் என்றால் எவ்வளவு தான் பணம் இருந்தாலும் ஒரு பெண்ணாகவோ மாற்றுத் திறனாளியாகவோ இருக்கும் போது சமூகத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி தான் அந்த இடத்துக்கு வர முடிகிறது என்பது உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
அது போன்று தான் சாதியும். சாதி முறையின் இருப்பே இங்கு பல தடைகளை உருவாக்குகிறது.
உங்கள் பெற்றோர் பட்டம் பெறவில்லை.
நீங்கள் பொறியியல் பட்டதாரி.
உங்கள் பெண் மருத்துவரோ CAவோ ஆகலாம்.
உங்கள் பேரன் IAS/IPS/IFS அதிகாரி ஆக வேண்டும்.
உங்கள் கொள்ளுப் பேரன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக வேண்டும்.
அவர்கள் என்ன படிப்பு, வேலைக்குப் போவார்கள் என்று இன்றே உங்களால் முடிவு செய்ய இயலாது.
அவர்கள் இந்த உயரங்களுக்குச் செல்லும் போது, அவர்களிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு சிக்கலாகவே இருக்காது.
இன்னும் இந்தியாவின் நீதித்துறையில், ஊடகங்களில், அதிகார மட்டங்களில் எப்படி சாதிப் பாகுபாடு நிலவுகிறது என்று அறிய மறுமொழிகளில் உள்ள இணைப்புகளைப் பாருங்கள்.
இன்னொன்று, தமிழகத்தில் தான் இட ஒதுக்கீடு சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழகம் தாண்டினால், பல மாநிலங்களில், ஒன்றிய அரசில் இட ஒதுக்கீட்டு இடங்களையே சரியாக நிரப்புவதில்லை.
பொதுப்பிரிவு இடங்கள் முழுதையும் ஆதிக்கச் சாதிகளுக்கான அறிவிக்கப்படாத இட ஒதுக்கீடாக வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் தகுதியான ஆள் இல்லை என்று பொய் சொல்லி அவற்றைப் பொதுப் பிரிவுக்கு மாற்றுகிறார்கள். எனவே, நீங்கள் ஒரு இடத்தை விட்டுக் கொடுத்தால், அது உங்கள் பிரிவில் உள்ள இன்னொரு ஏழைக்குத் தான் போய் சேரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
IITயில் பேராசிரியர் வேலைக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம்.
ஒன்று பொதுப்பிரிவில்.
இன்னொன்று உங்கள் சாதிப் பிரிவில்.
பொதுப்பிரிவுக்குக் கட்டாயம் பொதுப்பிரிவு ஆளைத் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் மகனிடம் சாதிச் சான்றிதழ் இருந்து சரியான தகுதியும் இருந்தால், உங்கள் சாதிப் பிரிவிலாவது இடம் தாருங்கள் என்று வழக்கு போட்டு கூட மோதிப் பார்க்கலாம்.
ஆனால், சாதிச் சான்றிதழே இல்லை என்றால் தகுதியான ஆளே கிடைக்கவில்லை என்று அதையும் பொதுப்பிரிவுக்கு மாற்றி இன்னொரு பொதுப் பிரிவு ஆளுக்கு வேலை தருவார்கள்.
இது எல்லாம் கற்பனை இல்லை. ஆதாரத்துக்கு மறுமொழியில் உள்ள இணைப்பைப் பாருங்கள்.
சாதிப்பாகுபாட்டின் காரணமாக உங்கள் பிள்ளைகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களிடம் இட ஒதுக்கீடு என்னும் தடுப்பூசி/insurance தேவை. அவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவைப்படாமல் கூட போகலாம். ஆனால், சாதிச் சான்றிதழை நீங்கள் இப்போது வாங்கி வைக்காமல் விட்டால், அவர்களுக்கு அது தேவைப்படும் காலத்தில் கிடைக்காது.
உங்களிடம் சாதிச் சான்றிதழ் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கூடுதல் மதிப்பெண்கள் இருந்தால் தானாக பொதுப்பிரிவில் இடம் பிடித்து விடுவார்கள். ஆனால், சாதிச் சான்றிதழ் இருந்தால் தான் இட ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு பெற முடியும். வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இன்சூரன்ஸ், தடுப்பூசி போல. தக்க சமயத்தில் உதவும்.
நீ போதுமான அளவு முன்னேறிவிட்டாய், உன் மகனுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை என்பது தான் Creamy layer என்னும் சூழ்ச்சி.
இது என்ன சூழ்ச்சி என்றால், விவசாயி மகன் குமாஸ்தா ஆகலாம். ஆனால், குமாஸ்தா மகன் கலெக்டர் ஆகக் கூடாது என்னும் சூழ்ச்சி.
இட ஒதுக்கீடு முறையால் அதிகம் பாதிக்கப்படுவது ஆதிக்கச் சாதிகள் தான். அவர்களால் என்றும் இட ஒதுக்கீடு பெற முடியாது. எனவே, இட ஒதுக்கீடு பெறும் உங்களைப் போன்ற மற்ற பிரிவினர்களைக் குழப்பி விட்டு உங்களை எல்லாம் பொதுப்பிரிவுப் போட்டிக்கு இழுத்து விட்டால், இட ஒதுக்கீட்டின் பயன் நீர்த்துப் போகும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி தொடங்கிய மருத்துவர் கிருஷ்ணசாமி, “இட ஒதுக்கீடு தான் எங்கள் முன்னேற்றத்தைக் கெடுத்தது, எங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவியுங்கள்” என்று முன்வைக்கும் வினோத வேண்டுகோள்கள் எல்லாம் இந்தச் சூழ்ச்சிக்கு ஆளானதால் தான்.
இப்போதும் ஒன்றிய அரசு வேலை, வாய்ப்புகளில் இந்த Creamy layer என்னும் சூழ்ச்சி உள்ளது.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் Creamy layer கொண்டு வர முயன்று, அடுத்து வந்த தேர்தலில் அதற்கான விலையைக் கொடுத்தார்.
தமிழ்நாட்டு மக்களே தோற்கடித்த ஒரு ஐடியா இது. எனவே, நீங்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
இந்த அதிகார அமைப்பு இருக்கிறதே! ஏழைகளுக்கு உதவ உங்கள் gas மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று விளம்பரம் செய்வார்கள். நீங்களும் அதை நம்பி விட்டுக் கொடுத்து, கூடுதல் விலைக்கு gas வாங்குவீர்கள். அப்புறம் gas விலையும் ஏறிக் கொண்டே போகும். நீங்கள் விட்டுக் கொடுத்த தொகையும் யாருக்குப் போகிறது என்றும் தெரியாமல், அரசு தொடர்ந்து காசை வீணாக்கிக் கொண்டிருப்பதையும் கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் என்று புரிந்து கொள்ளவே நாளாகும்.
அது போல், இந்த creamy layerம் ஒரு சதுரங்க வேட்டை technique.
என்ன சொன்னாலும் சரி, இன்னமும் குற்ற உணர்வாக இருக்கிறது என்கிறீர்களா?
சமூகத்தில் உண்மையிலேயே பின்தங்கிய, இன்னும் இட ஒதுக்கீட்டின் பயன் போய் சேராமல் இருக்கும் குடும்பங்களுக்கு உரிய வாய்ப்பு தர சரியான முறை ஒன்று உள்ளது. அது தான் உள் ஒதுக்கீடு முறை.
தமிழ்நாட்டில் மொத்தமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பிரித்துத் தனியே மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பிரிவை உருவாக்கியதும், அருந்ததியர், இசுலாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுத்ததும் மிகவும் சரியான நடைமுறைகள். இதையெல்லாம் காலத்தின் தேவை கருதி அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
முதல் தலைமுறைப் பொறியாளராக வந்துள்ள உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டிலும் ஒன்றிரண்டு தலைமுறைகள் ஏற்கனவே பொறியியலாளர்களாக இருந்தவர்களின் பிள்ளைகள் இன்னும் கூடுதல் தன்னம்பிக்கையுடன் கல்லூரி, வேலை இடங்களில் உலவுவதைப் பார்த்திருப்பீர்கள்.
இந்தியாவின் அதிகார அடுக்குகளுக்கு, ஒரு மூன்றாம் தலைமுறை தலித் officerஐக் கையாள்வதை விட முதல் தலைமுறை தலித் officerஐக் கையாள்வது சுலபமானது. அது அதைத் தான் விரும்புகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வலுவான குரல் ஒலிப்பதை அது விரும்புவதில்லை.
எனவே, இன்னொரு ஏழை மாணவருக்கு வாய்ப்பு பறிபோகுமா என்று கவலைப்படாமல் உங்கள் மகளை அதிகாரம் உலவுகிற அத்தனை இடங்களுக்கும் அனுப்பி வையுங்கள். நீங்கள் சார்ந்து வந்திருக்கும் சமூகத்தின் குரலாக இன்னும் துணிவுடன் ஒலிக்க, அவருக்கு உங்கள் குடும்பம் கடந்த வந்த வரலாற்றையும் சொல்லி வளருங்கள்.
வாழ்த்துகள்.
https://www.ibtimes.co.in/high-caste-hindus-refuse-get-into-boat-christian-rescuer-kerala-778355